அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி ஒருநாள் தொடரை வென்றது. 

அயர்லாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் போட்டியில் நெதர்லாந்து அணியும், 2வது போட்டியில் அயர்லாந்து அணியும் வெற்றி பெற்ற நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி டெக்டார் 58 ரன்களும், அவருக்கு அடுத்தபடியாக டாக்ரெல் 40 ரன்களும் அடித்தனர். இவர்களை தவிர மற்றவர்கள் சொதப்பியதால் 163 ரன்களுக்கே ஆல் அவுட்டானது அயர்லாந்து அணி. அந்த அணியின் சீனியர் வீரர்களான கெவின் ஓ பிரயன் மற்றும் பால் ஸ்டெர்லிங் ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர்.

இதையடுத்து 164 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டீஃபன் மைபர்க் மற்றும் மேக்ஸ் ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். மேக்ஸ் 36 ரன்னில் ஆட்டமிழக்க, அபாரமாக ஆடி அரைசதம் அடித்த ஸ்டீஃபன் 74 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் மிடில் ஆர்டர் வீரர்கள் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், இலக்கு எளிதானது என்பதால் 46வது ஓவரில் இலக்கை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி, ஒருநாள் தொடரை 2-1 என வென்றது.