சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 155 ரன்கள் அடித்து, 156 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. இந்த சீசனில் இரு அணிகளுமே படுமோசமாக ஆடிவரும் நிலையில், பரம எதிரிகளான இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் இந்த போட்டியில் மோதின.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்(அதுமட்டும்தான் செய்தார்). சிஎஸ்கே அணி 2 மாற்றங்களுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியது.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, தோனி, ரவீந்திர ஜடேஜா, ட்வைன் ப்ரிட்டோரியஸ், ட்வைன் பிராவோ, மஹீஷ் தீக்ஷனா, முகேஷ் சௌத்ரி.
மும்பை இந்தியன்ஸ் அணி:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிவால்ட் பிரெவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, டேனியல் சாம்ஸ், ரித்திக் ஷோகீன், ரிலே மெரிடித், ஜெய்தேவ் உனாத்கத், ஜஸ்ப்ரித் பும்ரா.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையுமே முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் முகேஷ் சௌத்ரி. பேபி ஏபி என்றழைக்கப்படும் இளம் அதிரடி வீரர் டிவால்ட் ப்ரெவிஸை தனது அடுத்த ஓவரான இன்னிங்ஸின் 3வது ஓவரில் வீழ்த்தினார் முகேஷ் சௌத்ரி.
முகேஷ் சௌத்ரி அருமையாக பந்துவீசி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக பெயரளவில் ஜடேஜா இருந்தாலும், களத்தில் பவுலிங் மாற்றம், ஃபீல்டிங் செட்டப் ஆகிய அனைத்துமே தோனி தான் செய்கிறார் என்பது விமர்சனமாகவே எழுந்திருந்தது. அதுதொடர்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் மீட்டிங்கை போட்டு, இனிமேல் ஜடேஜாவே கேப்டன்சியை பார்த்துக்கொள்ளட்டும்; நீங்கள் விலகிக்கொள்ளுங்க என தோனிக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனாலும் தோனியின் ஆதிக்கம் தொடர்ந்துவருகிறது. இன்றைய போட்டியில் பவுலிங் சுழற்சி, ஃபீல்டிங் செட்டப் ஆகிய அனைத்தையுமே தோனி தான் செய்தார்.
அதனால் சுயமாக ஜடேஜா சற்று கீழாக உணர்வது, அவரது ஃபீல்டிங்கிலேயே வெளிப்பட்டது. சமகாலத்தின் தலைசிறந்த ஃபீல்டரான ஜடேஜா, 2 எளிய கேட்ச்களை தவறவிட்டார். 23 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட மும்பை அணி, அதன்பின்னரும் சூர்யகுமார் யாதவ்(32), ரித்திக் ஷோகீன்(25) மற்றும் பொல்லார்டு(14) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. சிஎஸ்கே அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தாலும், ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. பிராவோ ஒரு கேட்ச், ஜடேஜா 2 கேட்ச், ஷிவம் துபே ஒரு கேட்ச் என கைக்கு வந்த நிறைய கேட்ச்களை தவறவிட்டனர் சிஎஸ்கே வீரர்கள். ஆனால் அதையும் மீறி மும்பை வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த திலக் வர்மா கடைசி வரை களத்தில் நின்று 43 பந்தில் 51 ரன்கள் அடித்தார். ஜெய்தேவ் உனாத்கத் கடைசியில் 9 பந்தில் 19 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 156 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.
