IPL 2021 வலுவான பேட்டிங்கை கொண்ட மும்பை இந்தியன்ஸை குறைவான ரன்னுக்கு கட்டுப்படுத்திய கேகேஆர்
வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியை 155 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது கேகேஆர் அணி.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, மும்பை அணி முதலில் பேட்டிங் ஆடியது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் குயிண்டன் டி காக்கும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பவர்ப்ளே 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் அடித்தது மும்பை அணி. ரோஹித் சர்மா 33 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஸ்பின்னர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைனை வைத்து மும்பை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தியது கேகேஆர் அணி.
சூர்யகுமார் யாதவ் 5 ரன்னிலும், இஷான் கிஷன் 14 ரன்னிலும் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த டி காக் 55 ரன்னிலும் ஆட்டமிழந்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய 18வது ஓவரில் பொல்லார்டு பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசினார். அந்த ஓவரில் 20 ரன்கள் அடித்தனர். ஆனால் ரசல் மற்றும் ஃபெர்குசன் ஆகிய இருவரும் கடைசி 2 ஓவர்களை அருமையாக வீசி 155 ரன்களுக்கு மும்பை அணியை கட்டுப்படுத்தியது கேகேஆர் அணி.
இதையடுத்து 156 ரன்கள் என்ற இலக்கை கேகேஆர் அணி விரட்டிவருகிறது.