IPL 2022: ஏலத்தில் யார் யாரை எடுப்பது..? சென்னையில் மீட்டிங்கை முடித்த தோனி..! 3 முக்கிய முடிவுகள்
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் யார் யாரை எடுப்பது என்பது குறித்து சென்னையில் சிஎஸ்கே அணி நிர்வாகிகளுடன் ஆலோசித்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைவதால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ளது.
அதற்கு முன்பாக பழைய அணிகள் ஒவ்வொன்றும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்துள்ளது. 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்பாக அதிகபட்சமாக தலா 3 வீரர்களை எடுத்துள்ளது.
மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எடுப்பது என்பது குறித்து அனைத்து அணிகளும் தீவிரமாக ஆலோசித்து மும்முரமாக ஏலத்திற்கு தயாராகிவருகின்றன. அந்தவகையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும் இதுதொடர்பாக ஆலோசிக்க நேற்றிரவு சென்னை வந்தார்.
சிஎஸ்கே அணி ஜடேஜா (ரூ.16 கோடி), தோனி (ரூ.12 கோடி), மொயின் அலி (ரூ.8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி) ஆகிய 4 வீரர்களையும் தக்கவைத்தது.
இந்நிலையில், ஏலம் தொடர்பாக முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்றிரவு சென்னை வந்தார் தோனி. ஒவ்வொரு அணியும் ரூ.90 கோடிக்கு வீரர்களை ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம். சிஎஸ்கே அணி தக்கவைத்த 4 வீரர்களுக்கு ரூ.42 கோடியை செலவு செய்துள்ளது. சிஎஸ்கே அணி ஏலத்தில் ரூ.48 கோடிக்கு வீரர்களை வாங்கலாம்.
அந்த பட்ஜெட்டில் யார் யாரை எடுப்பது என்பது குறித்து திட்டமிட வேண்டும். எனவே இன்று சிஎஸ்கே அணி நிர்வாகிகளுடன் தோனி ஆலோசனையில் ஈடுபட்டார். ஏற்கனவே அணியில் இடம்பெற்றிருந்த, ஆனால் தக்கவைக்க முடியாமல் விடுவிக்கப்பட்ட டுப்ளெசிஸ், பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், அம்பாதி ராயுடு ஆகிய வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுக்க இந்த ஆலோசனையின்போது முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த ஏலத்தில் நேரடியாக தோனியே கலந்துகொள்வார் என்று தெரிகிறது. இதுதொடர்பாக பேசி முடிவெடுத்ததாக தெரிகிறது.
இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல்லாக இருக்கும் என்பதால், அவர் இருக்கும்போதே அடுத்த கேப்டனை தயார் செய்யவேண்டும் என்பதால், ஜடேஜா இந்த சீசனிலேயே கேப்டனாக நியமிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.