கோலி, ரோஹித் 2 பேரையுமே ஈசியா தூக்கிடுவேன்..! ஆனால் அவருக்கு பந்துவீசுறதுதான் கஷ்டம்.. முகமது ஆமீர் ஓபன் டாக்
பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆமீர், தனது சர்வதேச கிரிக்கெட் கெரியரில் யாருக்கு பந்துவீச கடினமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான இடது கை ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆமீர், அண்மையில் தான் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
2009லிருந்து 2019 வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய முகமது ஆமீர், தோனி, கோலி, ரோஹித், டிவில்லியர்ஸ், மெக்கல்லம், ஸ்மித், வில்லியம்சன் உள்ளிட்ட பல சிறந்த வீரர்களுக்கு பந்துவீசிய அனுபவம் கொண்டவர்.
இந்நிலையில், தனது சர்வதேச கிரிக்கெட் கெரியரில் தான் பந்துவீசியதில், பந்துவீச மிகக்கடினமான பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் என்றும், சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களாக திகழும் ரோஹித்துக்கோ கோலிக்கோ பந்துவீசுவது தனக்கு எளிதான காரியம் என்றும் ஆமீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள முகமது ஆமீர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு பந்துவீசுவதுதான் கடினம். அவரது பேட்டிங் டெக்னிக் புரிந்துகொள்ள கடினமானது. அவர் நிற்கும் ஆங்கிளுக்கு பந்துவீசுவது சவாலானது. அதை புரிந்துகொள்ளவும் முடியாது. அவுட் ஸ்விங் வீசினால் சிம்பிளாக விட்டுவிடுவார். இன்ஸ்விங் வீசினால் ஃப்ளிக் ஷாட் ஆடிவிடுவார். எனவே அவரது பேட்டிங் டெக்னிக் தான் பந்துவீச கடினமானது.
ஆனால் ரோஹித், கோலி ஆகியோருக்கு பந்துவீசுவது கடினமாக இருந்தது இல்லை. ரோஹித் இடது கை ஃபாஸ்ட் பவுலரின் இன் ஸ்விங்கிற்கு கஷ்டப்பட்டிருக்கிறார். அது அவரது பலவீனம். அவுட் ஸ்விங்கும் வேகமாக வீசினால் திணறுவார். அதனால் அவருக்கு பந்துவீசுவது எனக்கு கடினமாக இருந்ததில்லை. அவருடன் ஒப்பிடுகையில், கோலிக்கு வீசுவது கடினம் என்றாலும், அவ்வளவு கடினமானது இல்லை என்று ஆமீர் தெரிவித்துள்ளார்.