Asianet News TamilAsianet News Tamil

மொயின் அலி அடித்த அடியில் களத்துலயே கண்ணீர் விட்டு கதறி அழுத குல்தீப்

இந்த சீசனின் முதல் 6 போட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி, 7வது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. பின்னர் மீண்டும் 8வது போட்டியில் தோற்றது. 9வது போட்டியில் கேகேஆர் அணியை எதிர்கொண்டது. 

moeen ali makes kuldeep yadav cry in ground
Author
Kolkata, First Published Apr 20, 2019, 3:05 PM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் தங்களது 9வது போட்டியை ஆடிய ஆர்சிபி அணி, கேகேஆர் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 

இந்த சீசனின் முதல் 6 போட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி, 7வது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. பின்னர் மீண்டும் 8வது போட்டியில் தோற்றது. 9வது போட்டியில் கேகேஆர் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி அதிரடி சதம் மற்றும் மொயின் அலியின் அதிரடியான அரைசதம் ஆகியவற்றால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 213 ரன்களை குவித்தது. 

214 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் லின் - நரைன் ஏமாற்றியதை அடுத்து கில் மற்றும் உத்தப்பாவும் சரியாக ஆடவில்லை. ஆனால் ரசலும் ராணாவும் இணைந்து கடைசி வரை போராடினர். கடைசி 6 ஓவர்களில் கேகேஆர் அணியின் வெற்றிக்கு 113 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராணாவும் ரசலும் இணைந்து 102 ரன்களை குவித்தனர். இதையடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 

moeen ali makes kuldeep yadav cry in ground

இந்த போட்டியில் ஆர்சிபியின் இன்னிங்ஸை நிதானமாகத்தான் தொடங்கினார் விராட் கோலி. 14வது ஓவரில்தான் ஆர்சிபி அணி 100 ரன்களை எட்டியது. அதன்பின்னர் டெத் ஓவர்களில் விராட் கோலி, மொயின் அலி மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய மூவரும் கேகேஆர் அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

குல்தீப் யாதவ் வீசிய 14வது ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் மட்டுமே அடித்த மொயின் அலி, குல்தீப் வீசிய 16வது ஓவரில் மொயின் அலி பொளந்து கட்டிவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 27 ரன்களை குவித்து அந்த ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார் மொயின் அலி. 28 பந்துகளில் 66 ரன்களை குவித்தார் மொயின் அலி. குறிப்பாக குல்தீப்பின் ஓவரை தாறுமாறாக அடித்துவிட்டார். 

கடந்த 2 சீசன்களில் அருமையாக வீசிவந்த குல்தீப், இந்த சீசனில் இதுவரை வெறும் 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவரது ஓவரில் அதிகமான ரன்களும் எடுக்கப்படுகின்றன். அதிலும் நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 59 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஐபிஎல்லில் ஒரு ஸ்பின் பவுலரின் மோசமான பந்துவீச்சு இது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், தனது பந்துவீச்சை மொயின் அலி பொளந்து கட்டியதை நினைத்து, அந்த ஓவர் முடிந்ததும் கண்ணீர் விட்டு அழுதார் குல்தீப். 

அந்த ஓவரை வீசி முடித்ததுமே அவரது அதிருப்தியும் மனவேதனையும் அவரது முகத்திலேயே தெரிந்தது. மொயின் அலி அடித்ததை நினைத்து கண்கள் கலங்கியவாறு சென்ற குல்தீப், பவுண்டரி லைனில் கண்ணீர் விட்டார். அப்போது சக வீரர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து தேற்றினர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios