IPL 2021 மோர்கன் கொடுத்த வாய்ப்பை செமயா பயன்படுத்தி வெளுத்து வாங்கும் மயன்க் அகர்வால்..!
கேகேஆர் கேப்டன் மோர்கன் தவறவிட்ட கேட்ச் வாய்ப்பை பயன்படுத்தி மயன்க் அகர்வால் அடித்து ஆடிவருகிறார்.
ஐபிஎல் 14வது சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் கேகேஆரை எதிர்கொண்டு ஆடிவரும் பஞ்சாப் கிங்ஸ் அணி, டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் அடிய கேகேஆர் அணி, வெங்கடேஷ் ஐயரின் அதிரடி அரைசதம்(69 ரன்கள்) மற்றும் திரிபாதி(34), நிதிஷ் ராணா(31) ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 165 ரன்கள் அடித்தது கேகேஆர் அணி.
166 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்ட தொடங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால், டிம் சௌதி வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே கேகேஆர் கேப்டன் மோர்கன் கைக்கு நேரடியாக கேட்ச் கொடுத்தார். ஆனால் எளிதான அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்.
அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட மயன்க் அகர்வால், அதற்கடுத்த ஓவர்களில் பவர்ப்ளேயை பயன்படுத்தி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். மயன்க் அகர்வாலின் அதிரடியான பேட்டிங்கால் பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் அடித்தது பஞ்சாப் அணி. அந்த சூழலில் மயன்க் அகர்வால், 20 பந்தில் 31 ரன்கள் அடித்திருந்தார். அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். அவரது பேட்டிங் ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தினால் மோர்கன் பெரிதாக வருந்துவார்.