தனி ஒருவனாக கடைசி வரை போராடிய மயன்க் அகர்வால்..! கடைசி பந்தில் போட்டி த்ரில் டை.. சூப்பர் ஓவர்
மயன்க் அகர்வால் தனி ஒருவனாக போராடி 89 ரன்களை குவித்து கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் அவுட்டாக போட்டி டை ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்படுகிறது.
ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன. துபாயில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல், டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
டெல்லி அணி 13 ரன்களுக்கே தவான், பிரித்வி ஷா, ஹெட்மயர் ஆகிய 3 விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து 73 ரன்களை சேர்த்தனர். ரிஷப பண்ட் 31 ரன்னிலும், ஷ்ரேயாஸ் 39 ரன்களிலும் ஆட்டமிழக்க, டெத் ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 20 ஓவரில் அரைசதம் அடித்தார்.
ஸ்டோய்னிஸின் அதிரடியால் கடைசி 3 ஓவரில் டெல்லி அணிக்கு 57 ரன்களை குவித்தது. கிறிஸ் ஜோர்டான் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்களை கிடைத்தது. எனவே 20 ஓவரில் 157 ரன்களை அடித்து 158 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி.
இதையடுத்து 158 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் களத்திற்கு வந்தனர். மயன்க் அகர்வால் ஒருமுனையில் நிதானமாக நிற்க, மறுமுனையில் அடித்து ஆடிய ராகுல் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 19 பந்தில் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த கருண் நாயரை பவர்ப்ளேயின் கடைசி ஓவரை(ஆறாவது ஓவர்) வீசிய அஷ்வின், தனது முதல் பந்திலேயே வீழ்த்தினார். அதே ஓவரில் நிகோலஸ் பூரானையும் கிளீன் போல்டாக்கி டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். கடந்த 2 சீசன்களாக தான் கேப்டன்சி செய்த பஞ்சாப் அணியின் 2 முக்கியமான விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார்.
ஆறு ஓவரில் வெறும் 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை பஞ்சாப் இழந்துவிட்டது. அதன்பின்னர் மேக்ஸ்வெல் ஒரு ரன்னிலும் சர்ஃபராஸ் கான் 12 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய மயன்க் அகர்வால், களத்தில் செட்டில் ஆன பிறகு, அடித்து ஆடிய மயன்க் அகர்வால், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார்.
மயன்க் அகர்வாலும் கிறிஸ் ஜோர்டானும் களத்தில் நிற்க, கடைசி ஓவரில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அஷ்வின் ஒரே ஓவரில் காயத்தால் வெளியேறியதால், அவரது எஞ்சிய கோட்டாவை மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீச வேண்டிய கட்டாயம் உருவானது. ரபாடா, நோர்ட்ஜேவின் பவுலிங் கோட்டா 19வது ஓவருடன் முடிந்ததால் கடைசி ஓவரை ஸ்டோய்னிஸ் வீசினார்.
கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரும் அடுத்த பந்தில் 2 ரன்னும் 3வது பந்தில் பவுண்டரியும் என முதல் 3 பந்திலேயே 12 ரன்களை அடித்த மயன்க் அகர்வால் 89 ரன்களில் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஜோர்டானின் விக்கெட்டையும் ஸ்டோய்னிஸ் வீழ்த்தியதையடுத்து, போட்டி டை ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்படுகிறது.