மாதவ் கௌசிக்கின் அபார சதத்தால் மும்பை அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த உத்தர பிரதேச அணி
விஜய் ஹசாரே இறுதி போட்டியில் மாதவ் கௌசிக்கின் அபார சதத்தால்(158), மும்பை அணிக்கு 313 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது உத்தர பிரதேச அணி.
விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டி டெல்லியில் இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி முதலில் பேட்டிங் ஆடி 312 ரன்களை குவித்தது.
உத்தர பிரதேச அணியின் தொடக்க வீரர் மாதவ் கௌசிக் தொடக்கம் முதலே சிறப்பாக அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். அவருடன் தொடக்க வீரராக இறங்கிய சமர்த் சிங் நன்றாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 55 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கரன் ஷர்மா(0), ப்ரியம் கர்க்(21), அக்ஷ்தீப் நாத்(55) ஆகியோர் ஆட்டமிழக்க, மாதவ் மட்டும் நிலைத்து ஆடினார்.
அபாரமாக ஆடி சதமடித்த மாதவ் கௌசிக், அதன்பின்னரும் சிறப்பாக ஆடி பெரிய இன்னிங்ஸை ஆடினார். 156 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 158 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று உத்தர பிரதேச அணியை 312 ரன்களை குவிக்கவைத்தார்.
மாதவ் கௌசிக்கின் அபார சதத்தால் 312 ரன்களை குவித்து 313 ரன்கள் என்ற கடின இலக்கை மும்பை அணிக்கு நிர்ணயித்தது உத்தர பிரதேச அணி. அந்த கடின இலக்கை மும்பை அணி விரட்டிவருகிறது.