லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் மார்க் உட் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். 

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் பக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குகின்றன. 10 அணிகள் ஆடுவதால் இந்த சீசன் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். 

ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை வாங்க ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு ரூபாயைக்கூட வீணடிக்காமல், மொத்த தொகையையும் துல்லியமாக செலவு செய்து வீரர்களை ஏலத்தில் எடுத்த ஒரே அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தான்.

ஐபிஎல் கோப்பையை 2 முறை கேகேஆருக்கு வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் தான் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படுகிறார். ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி சார்பில் கம்பீர் கலந்துகொண்டார். ஐபிஎல்லில் கோப்பையை வெல்லும் வித்தையை அறிந்த கௌதம் கம்பீர், ஏலத்தில் மிகச்சிறப்பாக அந்த அணியை வழிநடத்தினார்.

இதையும் படிங்க - MS Dhoni: ஜெர்சி எண் 7-ன் ரகசியத்தை சொன்ன தோனி

ஏலத்திற்கு முன்பாகவே கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகிய மூன்று வீரர்களை வாங்கி, கேஎல் ராகுலை கேப்டனாக நியமித்தது லக்னோ அணி. 

ஏலத்தில் மிகவும் கவனமாக செயல்பட்ட லக்னோ அணி, ராகுலுடன் தொடக்க வீரராக இறங்க, தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் - டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக்கை ரூ.6.75 கோடிக்கு லக்னோ அணி எடுத்தது. டி காக்கை மட்டுமல்லாது, மற்றொரு ஓபனிங் ஆப்சனாக வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் எவின் லூயிஸை ரூ.2 கோடிக்கு எடுத்தது. 

மிடில் ஆர்டர் பேட்டிங் ஆப்சனாக மனீஷ் பாண்டே மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் முறையே ரூ.4.60 கோடி மற்றும் ரூ.5.75 கோடிக்கும் எடுத்தது.

ஏலத்திற்கு முன்பாகவே ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸை அணியில் எடுத்துவிட்ட லக்னோ அணி, ஏலத்திலும் ஆல்ரவுண்டர்கள் மீது ஆர்வம் காட்டியது. சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரும் மேட்ச் வின்னருமான ஜேசன் ஹோல்டரை ரூ.8.75 கோடிக்கு எடுத்த லக்னோ அணி, ஸ்பின் ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்டியாவை ரூ.8.25 கோடிக்கு எடுத்தது. மற்றுமொரு ஸ்பின் ஆல்ரவுண்டரான கிருஷ்ணப்பா கௌதமை ரூ.90 லட்சத்திற்கு தட்டி தூக்கியது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகிய தரமான ஆல்ரவுண்டர்களை லக்னோ அணி எடுத்தது சரியான தேர்வு. 

இதையும் படிங்க - ICC WTC புள்ளி பட்டியல்: பாக்., - ஆஸி., டெஸ்ட் டிராவாவது இந்திய அணிக்கு அனுகூலம்..!

ஃபாஸ்ட் பவுலர்கள் தேர்விலும் மிகக்கவனமாக செயல்பட்ட லக்னோ அணி, ஃபாஸ்ட் பவுலர்களாக இந்தியாவின் ஆவேஷ் கான் (ரூ.10 கோடி) மற்றும் இங்கிலாந்தின் மார்க் உட் (ரூ.7.5 கோடி) ஆகிய இருவருடன் அங்கித் ராஜ்பூத்தை ரூ.50 லட்சத்திற்கு எடுத்தது லக்னோ அணி. ஷபாஸ் நதீம், மனன் வோரா, கரன் ஷர்மா, ஆயுஷ் பதானி உள்ளிட்ட அன்கேப்டு வீரர்கள் சிலரையும் அணியில் எடுத்தது.

சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து லக்னோ அணி வலுவான அணியாக கட்டமைக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், அந்த அணியில் ரூ.7.5 கோடிக்கு எடுக்கப்பட்டிருந்த இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் முழங்கை காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார்.

மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலரான மார்க் உட், லக்னோ அணியின் ஆடும் லெவனில் இடம்பெறவிருந்த வீரர் ஆவார். இந்நிலையில், அவர் காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியது லக்னோ அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். மார்க் உட்டுக்கு மாற்று வீரர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.