IPL 2022: கேஎல் ராகுலை ரூ.17 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது லக்னோ அணி..! தரமான 3 வீரர்களை தட்டி தூக்கியது லக்னோ
ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக, கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது லக்னோ அணி.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைகின்றன. அதனால் இந்த சீசன் முதல் 10 அணிகள் ஐபிஎல்லில் ஆடவுள்ளன. எனவே இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால், அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது.
கேஎல் ராகுல், டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் ஆகிய பெரிய வீரர்கள் சிலர் அவர்கள் சார்ந்த அணிகளிலிருந்து வெளிவந்தனர். லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகளும், ஏலத்திற்கு முன்பாக அதிகபட்சம் 3 வீரர்களை வாங்கிக்கொள்ளலாம்.
அந்தவகையில், அகமதாபாத் அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ரிஸ்ட் ஸ்பின்னர் ரஷீத் கான் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் வாங்குகிறது.
மற்றொரு புதிய அணியான லக்னோ அணி, கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும் ஒப்பந்தம் செய்துள்ளது.
பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் அந்த அணியிலிருந்து வெளியேறிய நிலையில், அவரை ரூ.17 கோடிக்கு லக்னோ அணி ஒப்பந்தம் செய்துள்ளது. விராட் கோலியை ஆர்சிபி அணி ரூ.17 கோடிக்குத்தான் தக்கவைத்துள்ளது. இதுதான் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரு வீரருக்கு வழங்கப்படும் உச்சபட்ச தொகை. இந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் இதைவிட பெருந்தொகைக்கு எந்த வீரராவது விலைபோகிறாரா என்று பார்க்கவேண்டும்.
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸை ரூ.9.2 கோடிக்கும், ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோயை ரூ.4 கோடிக்கும் ஒப்பந்தம் செய்துள்ளது லக்னோ அணி. கேஎல் ராகுல் தான் லக்னோ அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தவுள்ளார்.