தோனியை ரொம்ப மிஸ் பண்றேன்..! அவரு போனதுக்கு பிறகு எனக்கு சான்ஸே கிடைக்கல.. குல்தீப் வருத்தம்
தோனியின் ஆலோசனையை தான் மிஸ் செய்வதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று அதிவேகமாக வளர்ந்து, வளர்ந்த அதேவேகத்தில் வீழ்ந்த ஒரு வீரர் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்(சைனாமேன்) குல்தீப் யாதவ்.
அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடியின் இடத்தை பிடித்த குல்தீப் - சாஹல் ஜோடியால், அஷ்வின் - ஜடேஜா அளவிற்கு நீடித்து நிலைக்க முடியவில்லை. 2017-2018ம் ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்து, இந்திய அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்த குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி, 2019லிருந்து வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது.
3 விதமான போட்டிகளிலும் அபாரமாக பந்துவீசி வந்த குல்தீப் யாதவ், 2019 ஐபிஎல்லில் மரண அடி வாங்கினார். இதையடுத்து கேகேஆர் அணியின் ஆடும் லெவனிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அவருக்கு, 2020 ஐபிஎல்லிலும் பெரிதாக வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், இந்த சீசனில் குல்தீப்பை கேகேஆர் அணி கழட்டிவிட, ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்காமல் பென்ச்சில் உட்கார வைத்தது.
3 விதமான சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியிலும் ஆடிவந்த குல்தீப், இப்போது எந்தவிதமான போட்டியிலும் ஆடுவதில்லை. மேலும் 2019 உலக கோப்பைக்கு பிறகு, குல்தீப்பும் சாஹலும் இணைந்து ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. அவர்கள் இருவரும் இணைந்து ஆடமுடியாமல் போனதற்கு தோனியும் ஒரு காரணம்.
சீனியர் விக்கெட் கீப்பரான தோனி, இந்திய அணியில் ஆடியவரை, குல்தீப்பும் சாஹலும் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதற்கு காரணம், விக்கெட் கீப்பரான தோனி, எந்த வீரருக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கிவந்தார். அவரது அறிவுரைகளின்படி பந்துவீசியதால் குல்தீப்பும் சாஹலும் ஜொலித்தனர். ஆனால், 2019 உலக கோப்பைக்கு பிறகு ஆடாததால், அவரை பயங்கமாக மிஸ் செய்யும் குல்தீப், சாஹல் ஆகிய இருவரையும் ஒரு கையை இழந்ததுபோல் திணறிவருகின்றனர்.
அதை குல்தீப் யாதவும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் பேசிய குல்தீப் யாதவ், சில சமயம் தோனியின் ஆலோசனைகளை மிஸ் செய்கிறேன். அவரது அனுபவத்திற்கு அவர் ஸ்டம்பிற்கு பின்னால் நின்றுகொண்டு ஏராளமான ஆலோசனைகளை வழங்குவார். அவரது அனுபவத்தை மிஸ் செய்கிறேன். ரிஷப் பண்ட் இப்போது இளம் வீரர். அவர் அனுபவத்தை பெறப்பெற அவரும் பிற்காலத்தில் ஆலோசனைகளை வழங்குவார். ஆனால் தோனி ஆடாததற்கு பிறகே, நானும் சாஹலும் இணைந்து ஆடவேயில்லை என்று குல்தீப் தெரிவித்தார்.