பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, 20 ஓவரில் 165 ரன்கள் அடித்து, 166 ரன்கள் என்ற சவாலான இலக்கை பஞ்சாப் கிங்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில், கேகேஆரும் பஞ்சாப் கிங்ஸும் ஆடிவருகின்றன. துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, கேகேஆர் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான வெங்கடேஷ் ஐயர், கடந்த போட்டிகளை போலவே அருமையாக ஆடினார். தொடக்கம் முதலே அடித்து ஆடிய வெங்கடேஷ் ஐயர், ஷமி, எல்லிஸ், அர்ஷ்தீப், ரவி பிஷ்னோய், ஃபேபியன் ஆலன் ஆகிய பஞ்சாப் அணியின் அனைத்து பவுலர்களின் பவுலிங்கையும் வெளுத்துவாங்கிய வெங்கடேஷ் ஐயர் 39 பந்தில் அரைசதம் அடித்தார்.

வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து அருமையாக அடித்து ஆடிய ராகுல் திரிபாதி, ரவி பிஷ்னோயின் சுழலில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரைசதத்திற்கு பின்னரும் பவுண்டரிகளை விளாசிய வெங்கடேஷ் ஐயர், 49 பந்தில் 67 ரன்கள் அடித்து ரவி பிஷ்னோயின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்திய நிதிஷ் ராணா 18 பந்தில் 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மோர்கன்(2), டிம் சேஃபெர்ட்(2), தினேஷ் கார்த்திக்(11) ஆகியோர் சொதப்ப, 20 ஓவரில் 165 ரன்கள் அடித்த கேகேஆர் அணி, 166 ரன்கள் என்ற சவாலான இலக்கை பஞ்சாப் கிங்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.