இங்கிலாந்து வீரர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் அவர்களால் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆடமுடியும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. எஞ்சிய போட்டிகளை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் ஆடமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் முடித்துவிட்டு, செப்டம்பர் - அக்டோபரில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு சென்று ஆடவுள்ளது. எனவே அந்த சுற்றுப்பயணங்களுக்கு தங்கள் அணியின் அனைத்து வீரர்களுடன் முழு பலத்துடன் செல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணி நிர்வாகம் உள்ளது. 

அதன்பின்னர் டி20 உலக கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகியவையும் இருப்பதால் வீரர்களின் பணிச்சுமை மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியமும் இருப்பதால், ஐபிஎல்லில் ஆட தங்கள் வீரர்களை அனுமதிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தயாராக இல்லை. பென் ஸ்டோக்ஸும் அதே கருத்தைத்தான் தெரிவித்திருந்தார்.

எனவே இங்கிலாந்து வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் ஆடுவது சந்தேகமாகியுள்ள நிலையில், இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அவர்களால் ஐபிஎல்லில் ஆடமுடியும் என்று கெவின் பீட்டர்சன் ஆலோசனை கூறியுள்ளார்.