ஷுப்மன் கில் காயம் காரணமாக அவருக்கு மாற்று வீரராக இலங்கையிலிருக்கும் பிரித்வி ஷாவை இங்கிலாந்துக்கு அழைக்க இந்திய அணி திட்டமிடுவதாக தகவல் வெளியான நிலையில், அதை மிகக்கடுமையாக எதிர்த்துள்ளார் கபில் தேவ். 

விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்தில் உள்ளது. அதனால் ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி, கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகிய வீரர்கள் இங்கிலாந்தில் உள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதனால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இந்த தொடருக்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் பயிற்சியில், ஷிகர் தவானின் கேப்டன்சியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தொடக்க வீரர் ஷுப்மன் கில் காயத்தால் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் - மயன்க் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவர் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார்.

ராகுல் மற்றும் மயன்க் ஆகிய 2 சிறந்த தொடக்க வீரர்கள் இங்கிலாந்தில் இருக்கும்போதிலும், ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரராக பிரித்வி ஷாவை இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு வரவழைக்கும் திட்டத்தை இந்தியா வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

அதை மிகக்கடுமையாக எதிர்த்துள்ளார் கபில் தேவ். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கபில் தேவ், பிரித்வி ஷாவை இலங்கையிலிருந்து அழைப்பதற்கான அவசியம் இல்லை. அணியை தேர்வு செய்த தேர்வாளர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். தேர்வாளர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு ஒரு அணியை தேர்வு செய்துள்ளார்கள். கோலி மற்றும் சாஸ்திரியுடன் ஆலோசிக்காமல் அந்த அணியை தேர்வு செய்திருக்கமாட்டார்கள். ராகுல் மற்றும் மயன்க் ஆகிய 2 மிகப்பெரிய தொடக்க வீரர்கள் அணியில் இருக்கும்போது, பிரித்வி ஷாவை அழைப்பது ஏற்கனவே அணியில் இருக்கும் வீரர்களை அவமானப்படுத்துவதாகும். எனவே அதற்கான அவசியம் இல்லை என்றே தான் நினைப்பதாக கபில் தேவ் தெரிவித்துள்ளார்.