டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணியை காம்ரான் அக்மல் தேர்வு செய்துள்ளார். 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. அமீரக கண்டிஷனுக்கு நன்கு பழக்கப்பட்ட பாகிஸ்தான் அணி மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வில் அனைத்து அணிகளும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் சரியான வீரர்களை தேர்வு செய்வது மிக முக்கியம். அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்திய அணி வரும் 7ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

பாகிஸ்தான் அணியில் சீனியர் ஆல்ரவுண்டர் ஷோயப் மாலிக்கை எடுப்பது தொடர்பாக கேப்டன் மற்றும் தலைமை தேர்வாளருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, சீனியர் வீரர்களான முகமது ஹஃபீஸ் மற்றும் ஷோயப் மாலிக் ஆகிய இருவரையும் அணியில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட அணியை முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் தேர்வு செய்துள்ளார்.

காம்ரான் அக்மல் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஷர்ஜீல் கான், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஆஸாம் கான், ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், ஆசிஃப் அலி, வஹாப் ரியாஸ், முகமது வாசிம் ஜூனியர், இமாத் வாசிம்.