4வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் 2 விக்கெட்டுகளை தனது 2வது ஓவரிலேயே வீழ்த்தி கொடுத்தார் பும்ரா. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்(11), ராகுல்(17) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் புஜாரா(4), ஜடேஜா(10) ஆகிய இருவரும் சொதப்பினர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் கோலி, 50 ரன்னில் நடையை கட்ட, அவரைத்தொடர்ந்து ரஹானே 14 ரன்னிலும் ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

பின்வரிசையில் இறங்கிய ஷர்துல் தாகூர் அடித்து ஆடி 31 பந்தில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் 36 பந்தில் 57 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, அதன்பின்னர் டெயிலெண்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. 

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. உமேஷ் யாதவும், பும்ராவும் ஸ்பெல்லை தொடங்கினர். முதல் ஓவரை உமேஷும், 2வது ஓவரை பும்ராவும் வீச, இன்னிங்ஸின் 4வது ஓவரை வீசிய பும்ரா(அவரது 2வது ஓவர்), அந்த ஓவரின் 2வது பந்தில் ரோரி பர்ன்ஸை 5 ரன்னில் போல்டாக்கினார். பின்னர் அதே ஓவரின் கடைசி பந்தில் ஹசீப் ஹமீதை ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார்.

191 ரன்களுக்கு சுருண்டு துவண்டு போயிருந்த இந்திய அணிக்கு, 4வது ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உற்சாகமூட்டியுள்ளார் பும்ரா. தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இங்கிலாந்து அணிக்கு, நெருக்கடி உருவாகியுள்ளது.