லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைவதால் 10 அணிகள் இந்த சீசனில் ஆடவுள்ளன. இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தன.
மெகா ஏலத்துக்கு முன்பாக புதிய அணிகள் இரண்டும் தலா 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம். அதன்படி, லக்னோ அணி கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும், அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் எடுத்துள்ளன.
ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்தில் பெரிய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதால் இந்த ஏலத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 896 இந்திய வீரர்கள் மற்றும் 318 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1214 வீரர்கள் அவர்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
வரும் பிப்ரவரி 12-13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நடக்கவுள்ளது. மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன. ஐபிஎல்லை இம்முறை இந்தியாவில் நடத்த விரும்பும் பிசிசிஐ, கொரோனா பாதிப்பு குறையாவிட்டால், வெளிநாட்டில் நடத்த திட்டமிடுகிறது.
கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும் ஏலத்தில் எடுத்த சஞ்சீவ் கோயங்காவின் லக்னோ அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என பெயர் சூட்டப்பட்டது. இந்த பெயர், சஞ்சீவ் கோயங்காவின் பழைய அணியான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்ற பெயரிலிருந்து எடுக்கப்பட்டது. புனே அணியின் பெயரான சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்ற பெயரை லக்னோவுடன் சேர்த்து லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என பெயரிட்டது.
இந்நிலையில், இப்போது லக்னோ அணியின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. புராணங்களில் இடம்பெற்றுள்ள, சக்தி வாய்ந்த மற்றும் இந்திய கலாசாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பறவையான கருடனை அடிப்படையாகக்கொண்டு இந்த லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் அமைந்துள்ளது.
