IPL 2022: லக்னோ அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமனம்! 2வது இன்னிங்ஸை ஆரம்பிக்கும் கம்பீர்
ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களம் காணவுள்ள லக்னோ அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 15வது சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைகின்றன.
எனவே அடுத்த சீசனிலிருந்து ஐபிஎல்லில் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கியது. அகமதாபாத் அணியை சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு வாங்கியது.
அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவிருப்பதால், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு (அதிகபட்சம் 4 வீரர்கள்) மற்ற வீரர்களை விடுவித்துள்ளன. ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் பயிற்சியாளர்களை நியமிப்பது, வீரர்கள் தேர்வு என செம பிசியாக உள்ளன. ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆண்டி ஃப்ளவரை தலைமை பயிற்சியாளராக நியமித்த லக்னோ அணி, ஆலோசகராக கௌதம் கம்பீரை நியமித்துள்ளது.
கௌதம் கம்பீர் இந்திய அணியிலும் சரி, ஐபிஎல்லிலும் சரி பெரிய மேட்ச் வின்னராக ஜொலித்தவர். முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடி தனது அணிக்கு வெற்றியை தேடித்தருவதில் வல்லவர் கம்பீர். ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்காக ஆடியிருக்கும் கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களில் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தவர்.
ஐபிஎல்லில் ரோஹித், தோனிக்கு நிகரான வெற்றிகரமான கேப்டன் கம்பீர். ஐபிஎல்லில் வெற்றி பெறும் உத்திகளை நன்கறிந்த கம்பீரை லக்னோ அணி ஆலோசகராக நியமித்துள்ளது.