Asianet News TamilAsianet News Tamil

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்தணும் - இன்சமாம் உல் ஹக் அதிரடி

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்த வேண்டும் என்று இன்சமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

inzamam ul haq opines india pakistan bilateral cricket series should be resume
Author
Pakistan, First Published Jun 10, 2021, 5:44 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் இருபெரும் எதிரி அணிகள் இந்தியா - பாகிஸ்தான். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். சர்வதேச அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வேற லெவலில் இருக்கும். இரு அணிகளுமே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். வெற்றி வேட்கையில் கடுமையாக போராடுவார்கள். இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அது வெறும் விளையாட்டு போட்டியல்ல; ஓர் உணர்வுப்பூர்வமான விஷயம்.

1980-90களில் பாகிஸ்தான் அணி இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் 1990களின் பிற்பகுதி மற்றும் 2000ம் ஆண்டுக்கு பிறகு நிலைமை மாற தொடங்கியது. பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி அதிகமான வெற்றிகளை குவித்தது. 

inzamam ul haq opines india pakistan bilateral cricket series should be resume

2013ம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. இருநாடுகளுக்கும் இடையே ராஜாங்க ரீதியில் சுமூக உறவு இல்லாத நிலையில், 2013ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனவே தவிர, இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை. 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது பல முன்னாள் வீரர்களின் கருத்தாகவும் உள்ளது. இதுதொடர்பான தங்களது விருப்பங்களை பல முன்னாள் வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தெரிவித்துவந்திருக்கின்றனர்.

அந்தவகையில், அதே விருப்பத்தை தற்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான இன்சமாம் உல் ஹக்கும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய இன்சமாம் உல் ஹக், ஆஷஸ் போட்டிகளை விட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகளை அதிகமான பேர் விரும்பி பார்த்தனர். இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளின் ஒவ்வொரு முமெண்ட்டையுமே ரசித்து ரசித்து பார்ப்பார்கள். எனவே கிரிக்கெட்டின் நலனுக்காகவும், கிரிக்கெட் வீரர்களின் நலனுக்காகவும், ஆசிய கோப்பை தொடர் மட்டுமல்லாது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு தொடர்களும் நடத்தப்பட வேண்டும் என்று இன்சமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios