அம்பயர் அவுட் கொடுக்காதபோதும், தானாகவே நடையை கட்டிய இந்திய வீராங்கனை பூனம் ராவத்..! வியந்த கிரிக்கெட் உலகம்
ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அம்பயர் அவுட் கொடுக்காதபோதும், அது அவுட் என்பதை அறிந்த இந்திய வீராங்கனை பூனம் ராவத் அவராகவே களத்தை விட்டு வெளியேறிய சம்பவம் கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள், ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்துவருகிறது.
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரு டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்தில் பகலிரவு போட்டியாக நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
முதல்நாள் ஆட்டம் மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டதால், முதல் நாள் ஆட்டத்தில் வெறும் 44 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. 2ம் நாளான இன்றைய ஆட்ட முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அருமையாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 127 ரன்கள் அடித்தார் ஸ்மிரிதி மந்தனா. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட்டில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் மந்தனா.
ஷெஃபாலி வர்மா 31 ரன்களும், பூனம் ராவத் 36 ரன்களும், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்களும், யாஸ்டிகா பாட்டியா 19 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். 2ம் நாளான இன்றைய ஆட்ட முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்துள்ளது. தீப்தி ஷர்மாவும், தானியா பாட்டியாவும் களத்தில் இருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது.
இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் ராவத் நேர்மையாக நடந்துகொண்ட செயல், அனைத்து தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. பூனம் ராவத் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய வீராங்கனை மாலினக்ஸ் வீசிய பந்து, பூனம் ராவத்தின் பேட்டை உரசிவிட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆஸி., வீராங்கனைகளுக்குக்கூட பேட்டில் பந்து உரசியது தெரியாததால், அவர்களும் பெரிதாக அப்பீல் செய்யவில்லை. ஆனால் பந்து பேட்டில் பட்டதை அறிந்த பூனம் ராவத், அம்பயர் அவுட் கொடுக்காதபோதும், அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், விக்கெட் கீப்பர் பந்தை கேட்ச் பிடித்த மாத்திரத்தில் பெவிலியனை நோக்கி நடையை கட்டினார்.
பூனம் ராவத் ஆட்டமிழந்தபோது, ஆஸி., அணியிடம் ரிவியூ கூட மீதமில்லை. எனவே அம்பயர் அவுட் கொடுக்காததால், பூனம் ராவத்தால் தொடர்ந்து ஆடியிருக்க முடியும். ஆனால் நேர்மையான முறையில் தனக்கு அவுட் என்று தெரிந்ததும், அம்பயரின் முடிவுக்காக கூட காத்திருக்காமல் களத்தை விட்டு வெளியேறினார் பூனம் ராவத். அவரது செயலை கண்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகினரும், ரசிகர்களும் வியந்து போய் புகழ்ந்து தள்ளிவருகின்றனர்.