யுவி, யூசுஃப் பதானின் அதிரடி அரைசதத்தால் கோப்பையை வென்ற இந்தியா லெஜண்ட்ஸ்
யுவராஜ் சிங் மற்றும் யூசுஃப் பதானின் அதிரடி அரைசதத்தால், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலகத்தொடர் ஃபைனலில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா லெஜண்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலகத்தொடரின் ஃபைனல் நேற்று நடந்தது. இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் ஃபைனலில் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி, இந்தியா லெஜண்ட்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
தொடக்க வீரர் சேவாக் 10 ரன்னில் ஆட்டமிழக்க, சுப்ரமணியம் பத்ரிநாத் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். சச்சின் டெண்டுல்கரும் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் யுவராஜ் சிங்கும் யூசுஃப் பதானும் இணைந்து அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தனர்.
யுவராஜ் சிங் 41 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, யூசுஃப் பதான் 36 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் அடிக்க, யுவராஜ் மற்றும் யூசுஃப் பதானின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 181 ரன்களை குவித்தது.
182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜெயசூரியா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொதப்ப, உருப்படியாக ஆடிய ஜெயசிங்கே மற்றும் வீரரத்னே ஆகியோரும் கடைசி வரை நின்று பொறுப்பை முடிக்காமல், ஜெயசிங்கே 40 ரன்களிலும், வீரரத்னே 38 ரன்னிலும் ஆட்டமிழக்க, இலங்கை லெஜண்ட்ஸ் அணி 167 ரன்கள் மட்டுமே அடிக்க, இந்தியா லெஜண்ட்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
ஆட்டநாயகனாக யூசுஃப் பதானும் தொடர் நாயகனாக தில்ஷானும் தேர்வு செய்யப்பட்டனர்.