Asianet News TamilAsianet News Tamil

மறுமுனையில் சப்போர்ட் இல்லாததால் சதத்தை தவறவிட்ட சுந்தர்! 2வது இன்னிங்ஸில் முதல்பந்தில் விக்கெட்எடுத்த அஷ்வின்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், வாஷிங்டன் சுந்தருக்கு மறுமுனையில் பேட்டிங்கில் மற்ற வீரர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காததால், முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.
 

india all out for 337 runs in first innings of first test against england
Author
Chennai, First Published Feb 8, 2021, 11:43 AM IST

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் சென்னையில் நேற்று தொடங்கிவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் இரட்டை சதம்(218), சிப்ளி(87), ஸ்டோக்ஸின்(82) சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 578 ரன்களை குவித்தது. 3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் இங்கிலாந்து அணி கடைசி 2 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது.

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழக்க, ஷுப்மன் கில் 29 ரன்னிலும், கேப்டன் கோலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். துணை கேப்டன் ரஹானேவும் வெறும் ஒரு ரன்னில் நடையை கட்ட, 73 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த புஜாராவும் ரிஷப் பண்ட்டும் சேர்ந்து சிறப்பாக பேட்டிங் ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 119 ரன்களை சேர்த்தது. இருவருமே அரைசதம் அடித்த நிலையில் புஜாரா 73 ரன்னில் ஆட்டமிழந்தார்.  அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட்டும் பெஸ்ஸின் சுழலில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். 

225 ரன்களுக்கு ஆறு விக்கெட் விழுந்துவிட, அதன்பின்னர் தமிழர்களான வாஷிங்டன் சுந்தரும் அஷ்வினும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் இணைந்து 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி 17 ஓவர்களை விக்கெட் விழாமல் கவனமாக ஆடி முடித்தனர். 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் அடித்திருந்தது.

4ம் நாள் ஆட்டத்தை வாஷிங்டன் சுந்தரும் அஷ்வினும் தொடர்ந்தனர். மிகக்கவனமாக ஆடிய அஷ்வின், லீச்சின் சுழலில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனதை சரியாக கணிக்காததால் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். 4ம் நாள் ஆட்டத்தில் சற்று வேகமாக அடித்து ஆடி ஸ்கோர் செய்தார் வாஷிங்டன் சுந்தர். அஷ்வின் ஆட்டமிழந்த பின்னர், இந்திய அணியின் டெயிலெண்டர்களான நதீம், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அஷ்வின் ஆட்டமிழந்த அடுத்த 27 ரன்னில் இந்திய அணி ஆல் அவுட்டானது.

ஒருமுனையில் சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களுடன் களத்தில் இருக்க, மறுமுனையில் நதீம், இஷாந்த், பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 337 ரன்களுக்கு இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சுருண்டது. வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மறுமுனையில் வீரர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் சுந்தர் சதமடித்திருப்பார். தனது சொந்த மண்ணான சென்னையில் முதல் டெஸ்ட் சதத்தை அடிக்கும் வாய்ப்பிருந்தும், அது சுந்தருக்கு கைகூடாமல் போய்விட்டது.

241 ரன்கள் என்ற முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸை முதல் பந்திலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் அஷ்வின். 4ம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் அடித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios