இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஜெயிக்க வேண்டிய மேட்ச் யாரும் எதிர்பாராதவிதமாக டிரா ஆனது. இந்திய அணி கோட்டை விட்டது எங்கே? என கேப்டன் சுப்மன் கில் விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், சில நேரங்களில் எதிரணியிடமிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாகச் செயல்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை வீரர் சோனல் தினுஷாவின் அபாரமான பேட்டிங்கும், கடைசி வரிசை வீரர்களின் போராட்டமும் இந்திய அணியின் க்ளீன் ஸ்வீப் கனவைத் தகர்த்தது. இதனால், கொழும்பில் நடந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றாலும், இந்த டிரா காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் இந்திய அணிக்குச் சரிவு ஏற்பட்டுள்ளது. நவம்பர் 19-ம் தேதி தொடங்கும் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்தியா தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: Sonal Dinusha: தோல்வியின் விளிம்பிலிருந்து இலங்கையை மீட்ட சோனல் தினுஷா... கொழும்புவில் நடந்தது என்ன?
இதுதான் டிரா ஆக முக்கிய காரணம்
இரண்டாவது டெஸ்ட் முடிந்த பிறகு BCCI வெளியிட்ட வீடியோவில் பேசிய கில், "இந்தத் தொடரில் நிறைய கற்றுக்கொண்டோம். நாங்கள் ஓரளவு நன்றாகவே விளையாடினோம். ஆனால், இந்தப் போட்டியில் நாங்கள் விரும்பிய முடிவு கிடைக்கவில்லை. இரண்டாம் நாள் ஆட்டத்திற்குப் பிறகு, இது எங்களுக்கு வெற்றியாக அமையும் என்று நம்பினோம். ஆனால், அடுத்த மூன்று நாட்கள் இலங்கை வீரர்கள் பேட்டிங் செய்த விதம் அபாரமானது. சில நேரங்களில் எதிரணியிடமிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் விளையாடிய விதத்திற்குப் பாராட்டுகள். நியூசிலாந்து தொடரில் சிறப்பாகச் செயல்படுவோம் என நம்புகிறேன்" என்றார்.
தேவ்தத் படிக்கல் சூப்பர் பேட்டிங்
இந்தத் தொடரின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவ்தத் படிக்கல்லையும் கில் பாராட்டினார். இரண்டு சதங்களை விளாசிய படிக்கல், காயமடைந்த சாய் சுதர்சனுக்குப் பதிலாக டெஸ்ட் அணியில் தனது மூன்றாவது இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார். படிக்கல் குறித்து கில் பேசுகையில், "ஒரு பேட்ஸ்மேன் செட்டில் ஆகிவிட்டால், அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் பேசுவோம். அதை தேவ்தத் செய்து காட்டினார். இது எங்களுக்கு மிகவும் நல்ல அறிகுறி. இந்தத் தொடரில் அவர் பேட்டிங் செய்த விதம் பார்ப்பதற்கே விருந்தாக இருந்தது. இது ஒரு வீரரின் மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது," என்றார்.
இதையும் படிங்க: Vaibhav Sooryavanshi: பவுலிங்கில் மிரட்டிய வைபவ்..! ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தல்..
மானவ் சுதரும் அசத்தல்
படிக்கல் இந்தத் தொடரில் 3 இன்னிங்ஸ்களில் 328 ரன்கள் குவித்து, 109.33 சராசரியுடன் முதலிடத்தில் இருந்தார். இதில் இரண்டு சதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 117. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி, 69.66 சராசரியுடன் 418 ரன்கள் எடுத்துள்ளார்.
தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதாரையும் கில் பாராட்டினார். காலேவில் நடந்த போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய சுதார், நீண்ட காலத்திற்கு இந்தியாவின் சுழற்பந்துவீச்சு தாக்குதலுக்குத் தலைமை தாங்கும் திறமை கொண்டவர் என்று கில் குறிப்பிட்டார்.
"அவர் எங்களுக்கு அற்புதமாகச் செயல்பட்டார். நீண்ட காலத்திற்கு இந்தியாவின் சுழற்பந்துவீச்சு தாக்குதலை வழிநடத்தும் ஒருவராக அவர் இருப்பார் என்று நான் நினைக்கிறேன். இந்தப் போட்டியிலும், முதல் போட்டியிலும் அவர் பந்துவீசிய விதம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. அவர் பந்துவீச வரும் ஒவ்வொரு முறையும், விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். அவர் அதைத் தொடர்வார் என நம்புகிறேன்'' என்று சுப்மன் கில் தெரிவித்தார்.

