டி20 உலக கோப்பை எங்கு நடத்தப்படும்..? ஜூன் 1ம் தேதி முடிவு எடுக்கும் ஐசிசி
டி20 உலக கோப்பை எங்கு நடத்தப்படும் என்று வரும் ஜூன் 1ம் தேதி ஐசிசி முடிவெடுக்கவுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. கொரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.
நாடே லாக்டவுனில் உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் 14வது சீசன் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஐபிஎல் எஞ்சிய போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படாது. வெளிநாட்டில் தான் நடத்தப்படும்.
எனவே இந்த ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை இந்தியாவில் நடத்துவதாக திட்டமிடப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடப்பது சந்தேகம் தான். கொரோனா நெருக்கடியான சூழலில் பல்வேறு நாட்டு அணிகள் கலந்துகொள்ளும் டி20 உலக கோப்பையை இந்தியாவில் நடத்துவது ரிஸ்க்.
டி20 உலக கோப்பையை நடத்துவது குறித்து ஆலோசிக்க, பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 29ம் தேதி கூடுகிறது. இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடரை எங்கு நடத்துவது என்று வரும் ஜூன் 1ம் தேதி முடிவு செய்யப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.