ஆபாசமா பேசிய பேர்ஸ்டோ.. ஆப்படித்த ஐசிசி
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-2 என வென்றது.
முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில், 11 ஓவரில் நியூசிலாந்து அணி 146 ரன்கள் அடித்தது. 147 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோ அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். வெறும் 18 பந்தில் 47 ரன்களை குவித்தார் பேர்ஸ்டோ. இங்கிலாந்து அணியும் சரியாக 146 ரன்களை அடிக்க, சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 17 ரன்களை அடித்து, நியூசிலாந்தை 8 ரன்களில் சுருட்டி வெற்றி பெற்றதுடன் தொடரையும் வென்றது.
இந்த போட்டியில் பேர்ஸ்டோ அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தால்தான் இங்கிலாந்து அணியால் போட்டியை டிரா செய்ய முடிந்தது. வெறும் 18 பந்துகளில் 47 ரன்களை விளாசிய பேர்ஸ்டோ தான் ஆட்டநாயகன். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அவர், அவுட்டான விரக்தியில் ஆபாசமான வார்த்தையை பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அது ஸ்டம்ப் மைக்கில் நன்றாக கேட்டது.
ஐசிசி விதிப்படி, களத்தில் ஆபாசமான வார்த்தைகளை பேசுவது தவறு. அதை அவர் ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளியும் அபராதமும் விதித்தது ஐசிசி. மேலும் பேர்ஸ்டோவுக்கு ஐசிசி கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பியது.