ஷிகர் தவானை இன்னும் அணியிலிருந்து தூக்கி எறியாதது ஏன்..? இதுதான் காரணம்
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் அண்மைக்காலமாக படுமோசமாக சொதப்பிவருகிறார்.
டெஸ்ட் அணியிலிருந்து ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டுவிட்ட தவான், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய போட்டிகளிலும் மந்தமாக ஆடி, அணிக்கு பயனற்ற வகையில் கொஞ்ச ரன்களை சேர்த்துவருகிறார்.
வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் படுமந்தமாக ஆடினார். மேலும் சையத் முஷ்டாக் அலி தொடரில் உள்நாட்டு பவுலர்களின் பவுலிங்கை கூட அவரால் சரியாக அடித்து ஆடமுடியவில்லை.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், தவான் தொடர்ந்து சொதப்பிவருவதால் அவருக்கு பதிலாக ராகுலை தொடக்க வீரராக இறக்கலாம் என்ற குரல்கள் எழுந்தன.
ஆனாலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அடுத்த தொடருக்கு தவான் எடுக்கப்பட்டுள்ளார். தவான் சொதப்பினாலும் அவர் ஏன் அணியில் தொடர்ச்சியாக எடுக்கப்படுகிறார் என்ற கேள்வி எழுகிறது.
தவான் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 தொடரில் சிறப்பாக ஆடியிருக்கிறார் என்பதாலும், ஐசிசி தொடர்களில் அபாரமாக ஆடி ரன்களை குவித்திருக்கிறார் என்பதாலும், அவர் டி20 உலக கோப்பையில் ஆடுவது அவசியம் என்று தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் கருதுகிறது. அதனால்தான் அவரது அனுபவத்தை கருத்தில்கொண்டு இன்னும் அணியில் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.