பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து அணி 47 ஓவரில் 248 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. 

வழக்கமான வீரர்கள் இல்லாத இங்கிலாந்து அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, வெற்றி வேட்கையில் 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளது. லண்டன் லார்ட்ஸில் நடந்துவரும் இந்த போட்டி மழையால் தாமதமாக தொடங்கியது. அதனால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவிட் மலான் மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய ஜாக் க்ராவ்லி ஆகிய இருவரும் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினர். 

ஹசன் அலி டேவிட் மலானை டக் அவுட்டாக்க, ஷாஹீன் அஃப்ரிடி க்ராவ்லியை வீழ்த்தினார். 21 ரன்னுக்கு இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஃபில் சால்ட்டும் ஜேம்ஸ் வின்ஸும் இணைந்து அபாரமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 97 ரன்களை சேர்த்தனர்.

சால்ட், வின்ஸ் ஆகிய இருவருமே அரைசதம் அடித்த நிலையில், ஃபில் சால்ட் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸ் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸ்(22) மற்றும் சிம்ப்சன்(17) ஆகிய இருவரையும் ஹசன் அலி வீழ்த்தினார். அதன்பின்னர் லெவிஸ் க்ரெகோரி மட்டும் நன்றாக ஆடி 40 ரன்கள் அடிதார். ஓவர்டன் மற்றும் சாகிப் மஹ்மூத் ஆகிய இருவரையும் ஹசன் அலி வீழ்த்த, 46வது ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து.

பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 248 ரன்கள் என்பது என்பது சவாலான இலக்கே.