இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த சிக்ஸரில் சிறுமி ஒருவருக்கு அடிபட்டது. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கெனிங்டன் ஓவலில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, பும்ராவின் அபாரமான பவுலிங்கில் மண்டியிட்டு சரணடைந்தது. 25.2 ஓவரில் வெறும் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பும்ரா அபாரமாக பந்துவீசி 7.2 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது பெஸ்ட் பவுலிங்கை பதிவு செய்தார்.

இதையடுத்து 111 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி இலக்கை விரட்டிவருகின்றனர். இலக்கு எளிதானது என்பதால் இவர்கள் இருவரும் இணைந்தே முடித்துவிடுவதற்கான வாய்ப்புள்ளது.

பொதுவாக அசால்ட்டாக சிக்ஸர்களை அடித்து தெறிக்கவிட வல்லவரான ரோஹித் சர்மா, இந்த போட்டியிலும் சிக்ஸர்களை விளாசிவருகிறார். ஷார்ட் பிட்ச் பந்துகளை சிக்ஸர் அடிப்பது ரோஹித்துக்கு கை வந்த கலை. அந்தவகையில், இன்னிங்ஸின் 5வது ஓவரில் டேவிட் வில்லி வீசிய அந்த ஓவரின் 3வது பந்தை தனது டிரேட்மார்க் புல் ஷாட்டை ஆடி சிக்ஸர் விளாசினார்.

ரோஹித் சிக்ஸர் அடித்த அந்த பந்து, ஸ்டேடியத்தில் இருந்த ஒரு சிறுமியை தாக்கியது. ரோஹித்தின் சிக்ஸரில் அடி வாங்கிய அந்த சிறுமி வலியால் துடிக்க, அவரை அழைத்துவந்தவரும், மற்றவர்களும் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.