தோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டது ஏன்..? கௌதம் கம்பீர் கூறும் காரணம்
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது ஏன் என கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
ஸ்டாண்ட்பை வீரர்கள் - ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். 2007ல் முதல் டி20 உலக கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்த கேப்டன் தோனி. 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி கோப்பைகளை வென்றவர் தோனி. எனவே அவரது அனுபவம் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு வெகுவாக பயன்படும் என்பதால், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தோனியின் நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், தோனியின் ரோல் தெளிவாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர் என பல பயிற்சியாளர்கள் உள்ளனர். விராட் கோலிக்கும், ரவி சாஸ்திரிக்கும் அவர்களை கடந்து ஒரு விஷயம் அணிக்கு தேவைப்படுகிறது. அதனால் தான் தோனி ஆலோசகராக எடுக்கப்பட்டிருக்கிறார். தோனி எடுக்கப்பட்டிருப்பதால், இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் சரியாக ஆடவில்லை என்று அர்த்தமல்ல. இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிவருகிறது.
தோனியின் அனுபவம் மற்றும் முக்கியமான போட்டிகளில் நெருக்கடியான சூழல்களில் நிதானமாக செயல்படும் தோனியின் மனநிலை ஆகியவை இந்திய அணிக்கு தேவை என்பதால் தான் அவர் ஆலோசகராக எடுக்கப்பட்டிருப்பார். நாக் அவுட் போட்டிகளில் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள தோனியின் கேப்டன்சி அனுபவம் பயன்படும். இது இளம் வீரர்களுக்கு பெரும் பலமாக அமையும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.