ஐபிஎல்லை அமீரகத்தில் ஆடுவது மும்பை இந்தியன்ஸ் அணிக்குத்தான் சாதகம்..! கௌதம் கம்பீர் அதிரடி
ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுவது மும்பை இந்தியன்ஸ் அணிக்குத்தான் கூடுதல் சாதகமாக இருக்கும் என்று கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் மட்டுமே நடந்த நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது.
அதற்காக அமீரகம் சென்றுள்ள அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், அமீரகத்தில் ஐபிஎல் ஆடுவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான கண்டிஷன்களில் ஆடவுள்ளது, பும்ரா, போல்ட் போன்ற நல்ல ஃபாஸ்ட் பவுலர்களை கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி. அமீரக ஆடுகளங்களில் பந்து ஸ்விங் ஆகும். எனவே மும்பை அணி அபாயகரமான அணியாக திகழும். தரமான ஃபாஸ்ட் பவுலர்களை கொண்ட மும்பை அணி, ஸ்விங் கண்டிஷனை விரும்பும். எனவே இது அவர்களுக்கு பெரும் சாதகமாக அமையும்.
அதேபோல, சேப்பாக்கம் மாதிரியான, பந்து நின்று வரும் ஆடுகளங்களில் தடுமாறினாலும், பந்து நன்றாக பேட்டிற்கு வரும் அமீரக ஆடுகளங்களில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகிய வீரர்கள் அதிரடியாக பேட்டிங் ஆடுவார்கள். துபாயிலோ, அபுதாபியிலோ அவர்கள் திணறமாட்டார்கள். எனவே தான் ஐபிஎல் அமீரகத்தில் ஆடுவதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய சாதகம் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.