டெல்லி கேபிடள்ஸை வெறும் 127 ரன்களுக்கு சுருட்டிய கேகேஆர் அணி, 128 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது. 

ஐபிஎல் 14வது சீசனில் இன்று ஷார்ஜாவில் நடந்துவரும் போட்டியில் கேகேஆரும் டெல்லி கேபிடள்ஸும் ஆடிவருகின்றன. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி கட்டாயத்துடன் இந்த போட்டியில் களமிறங்கிய கேகேஆர் அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவானும் ஸ்டீவ் ஸ்மித்தும் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடினார்கள். தவான் 20 பந்தில் 24 ரன்கள் அடித்து ஃபெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவிற்கு பின்னர், மிடில் ஓவர்களில் வருண் சக்கரவர்த்தியையும், சுனில் நரைனையும் வீசவைத்து டெல்லி அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினார் கேகேஆர் கேப்டன் மோர்கன்.

சுனில் நரைனின் பந்தில் வெறும் ஒரு ரன்னில் போல்டாகி சென்றார் ஷ்ரேயாஸ் ஐயர். நன்றாக ஆடிய ஸ்மித் 39 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஷிம்ரான் ஹெட்மயர்(4), லலித் யாதவ்(0), அக்ஸர் படேல்(0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். வெங்கடேஷ் ஐயர் பந்துவீசி அவரது பங்குக்கு அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

எளிதாக ஸ்கோர் செய்ய முடியாவிட்டாலும், முடிந்தவரை ஸ்கோரை உயர்த்தவேண்டும் என்பதற்காக பொறுமை காத்து ஆடிய கேப்டன் ரிஷப் பண்ட்டும் 39 ரன்னில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 20 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே அடித்தது டெல்லி அணி.

வெங்கடேஷ் ஐயர், கில், திரிபாதி, ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக், நரைன் என அதிரடி பேட்டிங் ஆர்டரை கொண்ட கேகேஆர் அணிக்கு இது எளிதான இலக்கே என்பதால் கேகேஆருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.