டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராகக்கூட யுஸ்வேந்திர சாஹல் எடுக்கப்படாதது பெரும் வியப்பாக இருப்பதாக முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் 2017லிருந்து முதன்மை ஸ்பின்னராக ஆடிவந்தவர் யுஸ்வேந்திர சாஹல். விராட் கோலி இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனானதும், ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதனால் குல்தீப்பும் சாஹலும் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்து ஆடினர். ஆனால் 2019 உலக கோப்பையில் அவர்களது பவுலிங் பெரியளவில் எடுபடாததையடுத்து, அதன்பின்னர் இருவரும் ஒருசேர இந்திய அணியில் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே, ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஆகிய ஸ்பின்னர்கள் ஐபிஎல்லில் தொடர்ந்து அசத்தலாக பந்துவீசியதுடன், இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்புகளையும் அருமையாக பயன்படுத்தி கொண்டனர். அதேவேளையில், சாஹலும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
ஆனாலும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா, ராகுல் சாஹர், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகிய 5 ஸ்பின்னர்கள் எடுக்கப்பட்டபோதிலும், கோலியின் ஆஸ்தான ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹல் அணியில் எடுக்கப்படவில்லை. அஷ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.
ரிஸ்ட் ஸ்பின்னரான சாஹலை தலையில் தூக்கிவைத்து கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடினார் கேப்டன் கோலி. கோலியின் ஆஸ்தான ஸ்பின்னராகவும் திகழ்ந்த சாஹல், டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்கப்படவில்லை. ஆனால் நடப்பு ஐபிஎல் சீசனில், குறிப்பாக அமீரகத்தில் நடந்துவரும் 2வது பாகத்தில் அருமையாக வீசிவருகிறார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அருமையாக பந்துவீசிய சாஹல், 4 ஓவர்கள் வீசி வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். அனைத்து போட்டிகளிலுமே 20 ரன்களுக்கும் குறைவாகவே கொடுத்துவருகிறார் சாஹல். முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்திவருகிறார்.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சாஹல் புறக்கணிப்பு குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரும், முன்னாள் அணி தேர்வாளருமான தீப்தாஸ் குப்தா, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராகக்கூட சாஹல் தேர்வு செய்யப்படாதது வியப்பாகத்தான் உள்ளது. ராகுல் சாஹர் இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிராக நன்றாக பந்துவீசியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அக்டோபர் 10 வரை உலக கோப்பைக்கான அணியில் மாற்றம் செய்ய முடியும். அதனால், ரிசர்வ் வீரராகவாவது சாஹல் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
