பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன.
சிஎஸ்கே அணி ஆடிய முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. அதனால் இந்த சீசனில் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் சிஎஸ்கே அணியும், முதலிரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி மீண்டும் வெற்றி பெறும் முனைப்பிலும் களமிறங்குகின்றன.
மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். மும்பை மற்றும் புனேவில் ஐபிஎல் போட்டிகள் நடந்துவரும் நிலையில், 2வது இன்னிங்ஸில் பனியின் தாக்கம் அதிகமிருப்பதால், 2வது இன்னிங்ஸில் பந்துவீசுவது பவுலர்களுக்கு மிகக்கடினமாக இருக்கிறது. அதனால் அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. இந்த காரணத்தினால் 2வது பேட்டிங் செய்து இலக்கை விரட்டும் அணிகள் தான் வெற்றி பெறுகின்றன. டாஸ் ஜெயித்தால் மேட்ச் ஜெயிக்கலாம் என்கிற நிலை உள்ளது. அந்தவகையில், முதல் 2 போட்டிகளிலும் டாஸ் தோற்ற சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா, இந்த போட்டியில் டாஸ் ஜெயித்ததும், மகிழ்ச்சியுடன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடிய நிலையில், இந்த போட்டியில் 4வது வெளிநாட்டு வீரர் ஆப்சனை பயன்படுத்த நினைத்த சிஎஸ்கே அணி, ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டானை சேர்த்துள்ளது. அதனால் துஷார் தேஷ்பாண்டே நீக்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ட்வைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், ட்வைன் ப்ரிட்டோரியஸ், முகேஷ் சௌத்ரி.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்பின் ஆல்ரவுண்டர் ஹர்ப்ரீத் ப்ராருக்கு பதிலாக 2 பக்கமும் ஸ்விங் செய்யக்கூடிய பவுலரான வைபவ் அரோராவும், ராஜ் பாவாவுக்கு ஜித்தேஷ் ஷர்மாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக்கான், ஜித்தேஷ் ஷர்மா, ஒடீன் ஸ்மித், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா.
