#PBKSvsRCB ஆர்சிபியை அடித்து துவம்சம் செய்த யுனிவர்ஸ் பாஸ்..! கேஎல் ராகுல் அதிரடி அரைசதம்
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அடித்து ஆடிய கெய்ல், பஞ்சாப் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்திவிட்டு, 24 பந்தில் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பஞ்சாப் கிங்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் மயன்க் அகர்வாலுக்கு பதில் அணியில் எடுக்கப்பட்ட பிரப்சிம்ரன் சிங் ஆகிய இருவரும் களமிறங்கினர்.
பிரப்சிம்ரன் சிங் 7 ரன்னில் ஆட்டமிழக்க, நிதானமாக தொடங்கிய ராகுலுடன் அதிரடி மன்னன் கெய்ல் ஜோடி சேர்ந்தார். பவர்ப்ளேயின் முதல் 5 ஓவர்களில் பஞ்சாப் அணி வெறும் 29 ரன்கள் மட்டுமே அடித்திருக்க, பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் கெய்ல் 5 பவுண்டரிகளை விளாச, பவர்ப்ளேயில் 49 ரன்களை குவித்தது பஞ்சாப் அணி.
பவர்ப்ளே முடிந்த அடுத்த 7வது ஓவரை சாஹல் வீச, அந்த ஓவரில் 2 சிக்ஸர்களை கெய்ல் விளாச, கெய்ல் அடித்து ஆட தொடங்கியதையடுத்து, ராகுலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாச ஆரம்பித்தார்.
அதிரடியாக ஆடி 23 பந்தில் 46 ரன்கள் அடித்த கெய்ல், அவர் எதிர்கொண்ட 24வது பந்தில் சாம்ஸின் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார். கெய்லின் அதிரடியால், பஞ்சாப் அணியின் ரன்வேகம் வேகமாக உயர, கெய்ல் அவுட்டாகும்போது அந்த அணியின் ஸ்கோர் 10.4 ஓவரில் 99 ரன்கள் ஆகும். சிறப்பாக ஆடிவரும் கேப்டன் கேஎல் ராகுல் அரைசதம் அடித்து தொடர்ந்து ஆடிவருகிறார்.ஐபிஎல்லில் தனது 25வது அரைசதத்தை பதிவு செய்தார் ராகுல்.