ஐபிஎல் 14வது சீசனில் அசத்திய இளம் வீரரின் தந்தை கொரோனாவிற்கு பலி..!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் சேத்தன் சகாரியாவின் தந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் தேசியளவில் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவை கொரோனா அதிபயங்கரமாக அச்சுறுத்திவருகிறது.
ஐபிஎல்லில் ஆடிய வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால்தான் ஐபிஎல் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள் அனைவரும் வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். இந்நிலையில், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய இளம் வீரர் சேத்தன் சகாரியாவின் தந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
ஐபிஎல் 14வது சீசனில் ராஜஸ்தான் அணியால் ரூ.1.2 கோடிக்கு இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலர் சேத்தன் சகாரியாவை ஏலத்தில் எடுத்தது. ராஜஸ்தான் அணிக்காக அபாரமாக பந்துவீசி முன்னாள் ஜாம்பவான்கள், ரசிகர்கள் உட்பட பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்து பாராட்டையும் பெற்றார் சகாரியா. சகாரியா 7 போட்டிகளில் ஆடி வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினாலும் அவரது பவுலிங் மிக அபாரமாக இருந்தது.
ஐபிஎல் ரத்தானதால் சகாரியா வீடு திரும்பிய நிலையில், அவரது தந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளார். சகாரியாவின் அண்ணன், தற்கொலை செய்து ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது அவரது தந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளார். எனவே சகாரியாவின் குடும்பமே அவரை மட்டுமே நம்பியுள்ளது. ராஜஸ்தான் அணி சார்பில் சகாரியாவிற்கு நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் சம்பளம் கண்டிப்பாக சகாரியாவிற்கு மிகப்பெரிய உதவியாக அமையும்.