கம்பீர் பற்றவைத்த நெருப்பு பற்றி எரிகிறது.. பதிலடி கொடுத்த சேத்தன் சவுகான்
நீ இந்திய அணிக்காக பவுலிங் போடுவதற்கு முன்பே பிஷன் சிங் பேடி மற்றும் சவுகான் என்ற 2 விக்கெட்டுகளை எடுத்துவிட்டாய் சைனி - கவுதம் கம்பீர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பொதுவாகவே நேர்மைக்கும் நியாயத்திற்கும் குரல் கொடுப்பவர் மட்டுமல்லாது, உண்மையை பொதுவெளியில் சொல்ல கொஞ்சம்கூட தயங்காதவர்.
எதற்கும் யாருக்கும் பயப்படாமல் சமரசம் செய்துகொள்ளாமல் வெளிப்படையாக தனதுகருத்தை தெரிவித்துவிடுவார். நியாயத்தின் பக்கம் நிற்பார். அந்த வகையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பாக பந்துவீசிவரும் நவ்தீப் சைனியை, ஆரம்பத்தில் டெல்லி ரஞ்சி அணியில் புறக்கணித்த பிஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சவுகான் ஆகிய இருவருடனும் கம்பீர் மோதிவருகிறார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சைனி, 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய திறன் பெற்றவர். இவரது திறமையை கண்ட கம்பீர், சைனியை டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க வலியுறுத்தினார். அப்போது டெல்லி ரஞ்சி அணிக்காக செலக்சன் கமிட்டியில் இருந்த முன்னாள் வீரர்கள் பிஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சவுகான் ஆகிய இருவரும் சைனியை சேர்க்க தடையாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடிய சைனி, தான் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார். மொத்தமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சைனியின் சிறப்பான ஆட்டத்தை கண்ட கம்பீர், ஆரம்பத்தில் டெல்லி ரஞ்சி அணியில் அவரை புறக்கணித்த பிஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சவுகான் ஆகிய இருவரையும் சீண்டினார்.
இதுகுறித்து கம்பீர் பதிவிட்ட டுவீட்டில், நீ இந்திய அணிக்காக பவுலிங் போடுவதற்கு முன்பே பிஷன் சிங் பேடி மற்றும் சவுகான் என்ற 2 விக்கெட்டுகளை எடுத்துவிட்டாய் என்று அவர்கள் இருவரையும் குத்திக்காட்டும்வகையில் சீண்டினார் கம்பீர்.
கம்பீரின் விமர்சனம் குறித்து பிஷன் சிங் பேடி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், எந்தளவிற்கு வேண்டுமானாலும் தரைமட்டத்திற்கு இறங்கக்கூடியவர் கம்பீர். நான் அவரைப்போல அல்ல. அவர் டுவீட் செய்திருந்த கருத்துக்குலாம் நான் பதில் சொல்லமாட்டேன். ஆனால் நான் சைனியை பற்றி தவறாக, குறைவாகவோ கருதியதுமில்லை, பேசியதுமில்லை. ஒருவர் இந்திய அணியில் இடம்பிடிக்கிறார் என்றால் அது அவரது திறமை. நான் டெல்லி கிரிக்கெட் வாரியத்தில் எந்த பொறுப்பிலுமே இல்லாதபோது, சைனியை வேண்டாமென்று சொல்ல நான் யார்..? எம்பி ஆனதற்கு பிறகும் கம்பீர் முதிர்ச்சியடையவில்லை என்று பிஷன் சிங் பேடி சாடினார்.
மேலும் சைனி குறித்து பேசிய பிஷன் சிங் பேடி, அவர் இப்போதுதான் ஒரு போட்டியில் ஆடியிருக்கிறார். அவர் ஆடியதை நான் டிவியில் தான் பார்த்திருக்கிறேன். போகப்போகத்தான் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பிஷன் சிங் பேடியின் பதிலடிக்கு உடனடியாக ரியாக்ட் செய்தார் கம்பீர். எந்தளவிற்கு வேண்டுமானாலும் இறங்குவேனா..? தகுதியில்லாத மகனை அணியில் சேர்க்க முயன்றவர் பிஷன் சிங் பேடி. தனது உறவினரை டெல்லி அணியில் சேர்க்க வளைந்துகொடுத்தவர் சேத்தன் சவுகான் என்று அவர்களின் உண்மை முகத்திரையை கிழித்த கம்பீர், பிஷன் சிங் பேடி, சைனியை புறக்கணித்து எழுதிய லெட்டரின் செய்தி தொடர்பான லிங்க்கையும் டுவீட் செய்திருந்தார்.
இந்நிலையில், கம்பீரின் குற்றச்சாட்டில் சிக்கிய மற்றொருவரான சேத்தன் சவுகான் தற்போது அந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சேத்தன் சவுகான், டெல்லியிலிருந்து திறமையான வீரர்கள் பலர் வெளிமாநிலத்திற்கு ஆட சென்றனர். அதனால் வெளிமாநிலங்களிலிருந்து திறமையான வீரர்களுக்கு டெல்லி அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் டெல்லி அணியில் இணைந்த வெளிமாநில வீரர்களுக்கு ஓராண்டுக்கு பிறகுதான் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது விதி.
அந்தநேரத்தில்தான் சைனியை அணியில் சேர்க்க வேண்டும் என்று கம்பீர் வலியுறுத்தினார். ஆனால் விதிப்படி சைனியை உடனடியாக சேர்க்கமுடியாது என்பதால் மறுத்தோம். அந்தநேரத்தில் இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், அப்போது டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த அருண் ஜெட்லி, பப்ளிக்காக மோதிக்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தியதால் அந்த விவகாரம் அத்துடன் விடப்பட்டது என்று சேத்தன் சவுகான் விளக்கமளித்துள்ளார்.
விதிப்படி சைனியை சேர்க்கமுடியவில்லையே தவிர, அவரது திறமையை சந்தேகிக்கவில்லை என்று சேத்தன் சவுகான் தெரிவித்துள்ளார்.