ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 133 ரன்கள் அடித்து, 134 ரன்கள் என்ற எளிய இலக்கை திருப்பூர் தமிழன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சேலத்தில் இன்று நடந்துவரும் போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் ஆடிவருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி:
ஸ்ரீகாந்த் அனிருதா (கேப்டன்), எஸ் அரவிந்த், ஆர் ராஜ்குமார், ஃப்ரான்சிஸ் ரோகின்ஸ், மான் பஃப்னா, துஷார் ராஹேஜா (விக்கெட் கீப்பர்), சுரேஷ் குமார், எம் முகமது, அஸ்வின் கிறிஸ்ட், எஸ் மோகன் பிரசாத், எஸ் மணிகண்டன்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி:
கௌஷிக் காந்தி (கேப்டன்), என் ஜெகதீசன் (விக்கெட்கீப்பர்), சோனு யாதவ், உத்திரசாமி சசிதேவ், ராஜகோபால் சதீஷ், எஸ் ராதாகிருஷ்ணன், எஸ் ஹரிஷ் குமார், மணிமாறன் சித்தார்த், சந்தீப் வாரியர், ஆர் அலெக்ஸாண்டர், சாய் கிஷோர்.
முதலில் பேட்டிங் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். எந்த வீரருமே நிலைத்து நின்று ஆடவில்லை. அதனால் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது சேப்பாக் அணி.
19.1 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 119 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 7ம் வரிசையில் இறங்கிய உத்திரசாமி சசிதேவ் கடைசி நேரத்தில் சில பெரிய ஷாட்டுகளை ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசி 2 பந்தில் சிக்ஸர் மற்றும் பவுண்டரியுடன் முடித்தார். அதிரடியாக ஆடிய உத்திரசாமி 29 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 45 ரன்களை விளாச, அவரது அதிரடியான பங்களிப்பின் உதவியுடன் 20 ஓவரில் 133 ரன்களையாவது எட்டியது சேப்பாக் அணி.
134 ரன்கள் என்ற எளிய இலக்கை ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி விரட்டுகிறது. திருப்பூர் தமிழன்ஸ் பவுலர்கள் அபாரமாக பந்துவீசினர். அதிகபட்சமாக அஸ்வின் கிறிஸ்ட் 3 விக்கெட்டுகளையும், மோகன் பிரசாத் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
