இந்திய அணியின் எதிர்காலமே அவருதான்.. இளம் வீரரை பாராட்டி தள்ளிய கேப்டன் கோலி
கடைசி டி20 போட்டியில் பவுலிங்கில் தீபக் சாஹரும் பேட்டிங்கில் ரிஷப் பண்ட்டும் அசத்தினர்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றது.
முதல் 2 டி20 போட்டிகளிலுமே வென்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
கடைசி டி20 போட்டியில் பவுலிங்கில் தீபக் சாஹரும் பேட்டிங்கில் ரிஷப் பண்ட்டும் அசத்தினர். ரிஷப் பண்ட்டிடமிருந்து சிறப்பானதொரு இன்னிங்ஸை எதிர்நோக்கி காத்திருந்த அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளார் ரிஷப் பண்ட்.
இந்திய அணி 27 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடி அரைசதம் அடித்த ரிஷப், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
ரிஷப் பண்ட் அவசரப்படாமல் நிதானமாகவும் பொறுப்புடனும் அதேநேரத்தில் அடித்தும் ஆடினார். ரிஷப்பிடமிருந்து இப்படியான ஒரு இன்னிங்ஸை எதிர்பார்த்திருந்த கேப்டன் கோலி, போட்டிக்கு பின்னர் அவரை பாராட்டி பேசினார்.
ரிஷப் குறித்து பேசிய கேப்டன் கோலி, ரிஷப் பண்ட்டைத்தான் இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கிறோம். ரிஷப் பண்ட் மிகச்சிறந்த திறமைசாலி. எனவே அவருக்கு அழுத்தம் கொடுக்காமல், அவருக்கு தேவையான ஸ்பேஸை கொடுக்க வேண்டும் என்று கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தூணாக இருந்த தோனியின் இடத்தை நிரப்ப வேண்டிய கடினமான கடமை ரிஷப்புக்கு உள்ளது. தோனியின் இடத்தை அவ்வளவு எளிதாக நிரப்பமுடியாது என்பதால், எடுத்த எடுப்பிலேயே ரிஷப்பிடமிருந்து பெரிதாக எதிர்பார்த்து அவருக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது. அதைத்தான் கோலி தெரிவித்துள்ளார்.