IPL 2022: ஐபிஎல்லில் இருந்து விலகிய சில பெரிய வீரர்கள்..! ரசிகர்கள் சோகம்
ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்திற்கு சில பெரிய வீரர்கள் பெயர் கொடுக்கவில்லை.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைவதால் 10 அணிகள் இந்த சீசனில் ஆடவுள்ளன. அதனால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. வரும் பிப்ரவரி 12 - 13 ஆகிய தேதிகளில் மெகா ஏலம் நடக்கவுள்ளது.
அதனால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தனர். கேஎல் ராகுல், டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா ஆகிய சில பெரிய வீரர்கள் புதிய அணிகளில் ஆடுகின்றன.
மெகா ஏலத்துக்கு முன்பாக புதிய அணிகள் இரண்டும் தலா 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம். அதன்படி, லக்னோ அணி கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும், அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் எடுத்துள்ளன.
ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்தில் கலந்துகொள்ள 896 இந்திய வீரர்கள் மற்றும் 318 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1214 வீரர்கள் அவர்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மிட்செல் ஸ்டார்க் ஆகிய பெரிய வீரர்கள் ஐபிஎல் ஏலத்திற்கு பெயர் கொடுக்கவில்லை. அவர்கள் இந்த ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளனர். அதேபோல இங்கிலாந்து வீரர்களான சாம் கரன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் ஏலத்திற்கு பெயர் கொடுக்கவில்லை. இவர்களில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேட்ச் வின்னர்களாக திகழ்ந்தவர்கள். அவர்கள் கடந்த சீசனில் ஆடாததே அந்த அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது. இந்நிலையில், இந்த சீசனிலும் அவர்கள் ஆடவில்லை.
இங்கிலாந்து அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கி படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவிடம் 4-0 என ஆஷஸ் தொடரை இழந்தது. இங்கிலாந்து அணி ஆடிய விதம் படுமோசமாக இருந்ததால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. டி20 லீக் போட்டிகளுக்கு இங்கிலாந்து வீரர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதில் கவனம் செலுத்துவதுதான் அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்ப காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், இங்கிலாந்தின் முக்கியமான பெரிய வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளனர்.
ஐபிஎல்லின் ஆதர்ஸ நாயகனாக திகழ்ந்துவந்த யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றுவிட்டதால், அவர் ஐபிஎல்லில் ஆடவில்லை. கெய்ல் இல்லாத முதல் ஐபிஎல் சீசன் இதுதான்.