#IPL2021 எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் கண்டிப்பா இங்கிலாந்தில் நடக்காது..! எங்கு நடக்கும்..? பிசிசிஐ தகவல்
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் இங்கிலாந்தில் நடக்கவுள்ளதாக வெளிவரும் தகவல்கள் உண்மையல்ல என்று பிசிசிஐ தரப்பு தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், எஞ்சிய 31 போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.
ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், இங்கிலாந்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து செல்லும் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை முடித்துவிட்டு இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.
அதில் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 14ம் தேதி தான் முடிகிறது. அதன்பின்னர் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. கடைசி டெஸ்ட் செப்டம்பர் 14ம் தேதி முடிவடையவுள்ள நிலையில், ஐபிஎல்லை நடத்த ஏதுவாக கடைசி டெஸ்ட் போட்டியை ஒத்திவைப்பது குறித்து பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது. மேலும் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் இங்கிலாந்தில் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுகுறித்த தெளிவை பெற பிசிசிஐ அதிகாரி ஒருவரிடம் Asianet Newsable சார்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அந்த பிசிசிஐ அதிகாரி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் 2 ஆண்டுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. எனவே அந்த தொடரில் எந்த மாற்றமும் இருக்காது. திட்டமிட்டபடியே நடக்கும். இந்தியாவில் நிலைமை சீரடைந்தால் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவிலேயே நடக்கும். அப்படியில்லை என்றால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.