#T20WorldCup இந்திய அணியின் ஆலோசகராக தோனியை நியமித்தது ஏன்? அவரது ரோல் என்ன? தெளிவுபடுத்திய கங்குலி
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்பதை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெளிவுபடுத்தியுள்ளார்.
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
விராட் கோலி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்கான ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
2007ல் முதல் முறையாக நடந்த டி20 உலக கோப்பையை வென்ற தோனி, அதன்பின்னர் அனைத்து டி20 உலக கோப்பைகளிலும் ஆடியவர். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு 3 முறை டைட்டிலை வென்று கொடுத்தவர் தோனி. எனவே அவரது அனுபவமும், நிதானமான மனநிலையும் இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையில் உதவும் என்பதால் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இந்திய அணியில் ஏற்கனவே தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என தனித்தனி துறைகளுக்கு தனித்தனி பயிற்சியாளர்கள் இருக்கும் நிலையில், திடீரென தோனியை ஆலோசகராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது.
தோனி ஆலோசகராக நியமிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன? அவரது ரோல் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு பதிலளித்த பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியிலும் சிஎஸ்கே அணியிலும் நல்ல ரெக்கார்டை வைத்துள்ளார் தோனி. அவரது இருப்பு இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையில் உதவும். தோனி நியமனத்திற்கு பின்னால் நிறைய காரணங்களும் சிந்தனைகளும் உள்ளன. இதுதொடர்பாக நன்கு விவாதித்து கடைசியில் தான் முடிவெடுத்தோம். 2013க்கு பிறகு இந்திய அணி இன்னும் ஐசிசி டிராபி ஜெயிக்கவில்லை.
2019ல் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-2 என டிரா செய்தபோது, அந்த அணியில் ஸ்டீவ் வாக் அளித்த பங்களிப்பையோ, அவரது ரோலையோ மறந்துவிட வேண்டாம். பெரிய வீரர்களின் இருப்பு, மிகப்பெரிய தொடர்களில் எப்போதுமே உதவிகரமாக இருக்கும் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.