#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் எங்கு, எப்போது நடத்தப்படும்..? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், ஐபிஎல்லில் ஆடிய சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஐபிஎல் 14வது சீசனில் இன்னும் 31 போட்டிகள் நடத்த வேண்டியுள்ளது. இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்டம்பர் 14ம் தேதி முடிவடையவுள்ளது.
அதன்பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த சீசன் முழுவதுமே அமீரகத்தில் தான் நடத்தப்பட்டது. இந்நிலையில், 14வது சீசனின் எஞ்சிய 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் நடத்தப்படும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாகவுள்ள நிலையில், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்துவது மற்றும் டி20 உலக கோப்பை ஆகியவை குறித்து ஆலோசிப்பதற்காக பிசிசிஐ சிறப்பு மீட்டிங் இன்று நடந்தது. அதில், ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டதையடுத்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.