இந்திய வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக்கறி சாப்பிடக்கூடாது..! BCCI Halal கறார் உத்தரவு
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என்று பிசிசிஐ (BCCI Halal) கொண்டுவந்துள்ள உணவு கட்டுப்பாட்டு முறை, நெட்டிசன்கள் மத்தியில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்தியாவில் நடந்த டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது.
அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிர தயாரிப்பை இப்போதே தொடங்கிவிட்டது.
இந்நிலையில், இந்திய வீரர்களின் ஃபிட்னெஸை பராமரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், இந்திய வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது பிசிசிஐ.
அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. ஹலால் அசைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
எனவே இனிமேல் அசைவ உணவுகளை சாப்பிட விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் அனைத்துவிதமான அசைவ உணவுகளையும் சாப்பிடமுடியாது. இந்து மற்றும் சீக்கிய மதங்களில் ஹலால் அசைவ உணவு தடை செய்யப்பட்டது. அந்தவகையில், ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று பிசிசிஐ கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் நடந்துவருகிறது.