ஐபிஎல்லில் முதல்முறையாக 2 போட்டிகளை ஒரே சமயத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

ஐபிஎல்லில் 13 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து, 14வது சீசனின் முதல் பாகம் இந்தியாவில் நடந்த நிலையில் 2வது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அக்டோபர் 15ம் தேதியுடன் ஐபிஎல் 14வது சீசன் முடிவடைகிறது. அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆடினாலும், சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டன.

ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 5 அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதால், இனிவரும் அனைத்து போட்டிகளுமே முக்கியமானதுதான்.

அக்டோபர் 8ம் தேதியுடன் லீக் சுற்று போட்டிகள் முடிவடைகின்றன. அக்டோபர் 8ம் தேதி கடைசி 2 லீக் போட்டிகள் நடக்கும் நிலையில், அந்த 2 போட்டிகளுமே ஒரே நேரத்தில் தொடங்கி ஒரே சமயத்தில் நடக்கின்றன.

மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி - டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகளுமே அக்டோபர் 8ம் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்லில் பொதுவாக, ஒரே நாளில் 2 போட்டிகள் நடப்பதென்றால், பிற்பகல் 3.30 மணிக்கு ஒரு போட்டியும், இரவு 7.30 மணிக்கு மற்றொரு போட்டியும் நடக்கும். ஆனால் ஐபிஎல்லில் முதல் முறையாக 2 போட்டிகள் ஒரே சமயத்தில் நடக்கவுள்ளன.