சதத்தை தவறவிட்ட முஷ்ஃபிகுர் ரஹீம்! இக்பால், மஹ்மதுல்லா அரைசதம்.. இலங்கைக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, தமீம் இக்பால் ஆகிய மூவரின் அரைசதங்களால் 50 ஓவரில் 257 ரன்கள் அடித்த வங்கதேச அணி, 258 ரன்கள் என்ற இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டி இன்று தாக்காவில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது.
வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான தமீம் இக்பால் சிறப்பாக ஆட, சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசன் 15 ரன்னில் வெளியேறினார்.
அதன்பின்னர் இக்பாலுடன் ஜோடி சேர்ந்த சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம், அபாரமாக ஆட, இருவருக்கும் இடையே பார்ட்னர்ஷிப் பில்ட் ஆனது. அரைசதம் அடித்த தமீம் இக்பால், 52 ரன்னில் ஆட்டமிழக்க, முகமது மிதுனும் டக் அவுட்டாக, அதன்பின்னர் ரஹீமும் மஹ்மதுல்லாவும் இணைந்து சிறப்பாக ஆடினர்.
அரைசதம் அடித்த ரஹீம் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், 84 ரன்னில் ஆட்டமிழந்து சத வாய்ப்பை தவறவிட்டு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய மஹ்மதுல்லாவும் அரைசதம் அடித்தார். மஹ்மதுல்லா 54 ரன்கள் அடிக்க, டெத் ஓவரில் அடித்து ஆடி அஃபிஃப் ஹுசைன் தன் பங்கிற்கு 27 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் வங்கதேச அணி 257 ரன்கள் அடித்து, 258 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.