தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது வங்கதேச அணி. 

வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தமீம் இக்பாலும், லிட்டன் தாஸும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 95 ரன்களை சேர்த்தனர். தமீம் இக்பால் 41 ரன்களும், லிட்டன் தாஸ் 50 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கி அபாரமாக பேட்டிங் ஆடிய அணியின் சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசன் 77 ரன்களை குவித்தார். யாசிர் அலியும் அரைசதம் அடித்து, பின்வரிசை வீரர்களும் சிறு சிறு பங்களிப்பு செய்ய 50 ஓவரில் 314 ரன்களை குவித்தது வங்கதேச அணி.

315 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியில் வாண்டர் டசனும் டேவிட் மில்லரும் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வாண்டர் டசன் 86 ரன்களும், டேவிட் மில்லர் 79 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்களிடமிருந்து பங்களிப்பு கிடைக்காததால் 49 ஓவரில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்க அணி.

36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வங்கதேச அணி. இது வங்கதேச அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும். தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது வங்கதேச அணி.