ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 

வங்கதேச அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, அடுத்ததாக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது வங்கதேச அணி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக சகாப்வா 43 ரன்கள் அடித்தார். டியான் மையர்ஸ் 35 ரன்களும், தொடக்க வீரர் மாதவெரெ 23 ரன்களும், பின்வரிசையில் இறங்கிய லூக் ஜாங்வே 18 ரன்களும் அடித்தனர். யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் 20 ஓவரில் 152 ரன்கள் மட்டுமே அடித்தது ஜிம்பாப்வே அணி.

இதையடுத்து 153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் முகமது நயீம் மற்றும் சௌமியா சர்க்கார் ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து, முதல் விக்கெட்டுக்கு 102 ரன்களை குவித்தனர். சௌமியா சர்க்கார் 50 ரன்களிலும், கேப்டன் மஹ்மதுல்லா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அவர்கள் இருவர் மட்டுமே ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் முகமது நயீம் 66 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று வங்கதேச அணியை வெற்றி பெற செய்தார். 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.