இந்தியாவுக்கு எதிரா ஆடுறத நெனச்சாலே வெறுப்பா இருக்கு.. ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் அதிரடி
இந்திய அணிக்கு எதிராக ஆடுவதற்கே பயமாக உள்ளதாக ஆஸ்திரேலிய வீராங்கனை மேகான் ஷட் தெரிவித்துள்ளார்.
மகளிர் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இதன் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
வரும் 8ம் தேதி இறுதி போட்டி மெல்பர்னில் நடக்கவுள்ளது. முதல்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் அணி, முதல்முறை டி20 உலக கோப்பையை தூக்கும் தீவிரத்தில் உள்ளது.
லீக் சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் ஷஃபாலி வெர்மாவின் அதிரடியான பேட்டிங் மற்றும் பூனம் யாதவின் அபாரமான பவுலிங்கின் விளைவாக இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. எனவே இந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருப்பதால், அதே நம்பிக்கையுடன் கோப்பையை வெல்லும் முனைப்பில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி.
லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஃபைனலில் இந்திய அணியை வீழ்த்தி சொந்த மண்ணில் டி20 உலக கோப்பையை தூக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இரு அணிகளுமே சமபலத்துடன் திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும்.
இறுதி போட்டி 8ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இந்தியாவை எதிர்கொள்வது குறித்து பேசிய ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஷட், இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதையே வெறுக்கிறேன். இந்திய வீராங்கனைகள் எனது பவுலிங்கை அடித்து நொறுக்குகின்றனர். ஸ்மிரிதி மந்தனாவும் வெர்மாவும் அபாரமாக ஆடுகின்றனர். முத்தரப்பு தொடரில் எனது பவுலிங்கில் அவர்கள் அடித்த சிக்ஸர் தான், எனது பவுலிங்கில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய ஷாட் என ஷட் தெரிவித்துள்ளார்.