#AUSvsIND இந்திய அணியின் மிகப்பெரிய பலமே இதுதான்..! ஆஸி., ஹெட் கோச் ஜஸ்டின் லாங்கர் ஓபன் டாக்
இந்திய அணியின் மிகப்பெரிய பலம் என்னவென்று ஆஸி., அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட்டில் ஆஸி., அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. அதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
முதல் டெஸ்ட்டில் தோற்ற இந்திய அணி, 2வது டெஸ்ட்டில் கோலி, ஷமி ஆகிய நட்சத்திர வீரர்களே இல்லாமல் ரஹானே தலைமையில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. அதே தன்னம்பிக்கையுடன் 3வது டெஸ்ட்டிலும் ஆஸி.,யை சொந்த மண்ணில் வீழ்த்தும் முனைப்பில் களம் காண்கிறது இந்திய அணி.
இந்நிலையில், இந்திய அணியின் மிகப்பெரிய பலம் என்னவென்று ஆஸி., அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜஸ்டின் லாங்கர், இந்தியாவின் மிகப்பெரிய பலம், கடந்த 2 ஆண்டுகளில் நான் பார்த்தவரையில், அவர்களது ஒழுக்கம் தான். களத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் விதமும் ஒழுக்கமும் தான் அவர்களது பலம். கடந்த 2 போட்டிகள் எனக்கு மிகவும் பிடித்தது. போட்டி என்பது பேட்டுக்கும் பந்துக்கும் இடையேயானதுதான்.
எப்படி ஆட வேண்டும் எங்களுக்கு தெரியும். ஆனால் முழு கிரெடிட்டும் இந்தியாவுக்குத்தான். பக்காவாக திட்டமிட்டு, பவுலிங்கில் ஒழுக்கத்தை காட்டினார்கள். தரமான பவுலிங் யூனிட்டிற்கு எதிராக ஆடுவது கடினம். பும்ரா, அஷ்வின் ஆகியோர் அருமையாக வீசினார்கள். இந்திய ஸ்பின்னர்கள் நல்ல திட்டங்களுடன் வீசினார்கள். அஷ்வினை எதிர்கொள்ள வியூகம் அவசியம் என்று லாங்கர் தெரிவித்தார்.